South Indian Crime Point as your Homepage
தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை என்று குற்றச்சாட்டு காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில், நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். சென்னை, மே.20- காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி இருப்பதாவது:- காவிரி நதிநீர் தீர்ப்பாய இறுதி உத்தரவு காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டம் கடைசியாக 10.2.2003 அன்று நடந்தது. அதன் பிறகு 9 ஆண்டுகள் ஆகியும் கூட்டம் நடத்தப்படவில்லை. காவிரி நதிநீர் தாவா தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை மத்திய அரசின் கெஜட்டில் (அரசிதழ்) வெளியிட மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என்றும், அந்த உத்தரவை சரியாக அமல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை குழுவின் நிலையை கண்டறியுமாறும் கடந்த 17.10.2001 அன்று தங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டேன். ஆனால், காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் வழக்கு முடிவடைந்த பின்னரே தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை அரசு கெஜட்டில் வெளியிடுவது பற்றி ஆலோசிப்பது சரியாக இருக்கும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி என்னிடம் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5.2.2007 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, ஜுன் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டிற்கு மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிடவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அணைகளில் தண்ணீர் தேக்கிவைப்பு மேலும், கர்நாடகா அரசு காவிரி நீரை 4 பெரிய அணைகளில் தேக்கி வைத்துக் கொண்டு பிப்ரவரி முதல் மே வரையுள்ள கோடைகால நீர்ப்பாசன தேவைக்காக அநியாயமான முறையில் தண்ணீரை பயன்படுத்தி இருக்கிறது. 1.2.2012 அன்று நிலவரப்படி, அந்த 4 பெரிய அணைகளில் ஒட்டுமொத்தமாக தேக்கிவைக்கப்பட்ட தண்ணீரின் அளவு 58.50 டி.எம்.சி. அடி ஆகும். கடந்த 14.5.2012 அன்று நிலவரப்படி அந்த 4 அணைகளின் இருந்த ஒட்டு மொத்த தண்ணீரின் அளவு 28.176 டி.எம்.சி. அடி. ஏற்கனவே 11 டி.எம்.சி. அடி தண்ணீரை பயன்படுத்திக்கொண்டு 1.2.2012 முதல் 14.5.2012 வரையுள்ள காலத்தில் 30.33 டி.எம்.சி. அடி அளவுக்கு தண்ணீரை அணைகளில் சேமித்து வைத்திருக்கிறது. 1.2.2012 முதல் 14.5.2012 வரையுள்ள காலத்தில் அவர்களின் மொத்த தண்ணீர் பயன்பாடு 41 டி.எம்.சி. அடிதான். உபரிநீரை திறந்து விடுகிறது கோடைகால மாதங்களில் தண்ணீரை வெளியேற்றி விடுவதால், கர்நாடகா அரசு தொடக்கத்தில் பெய்யும் பருவமழை நீரை அணைகளில் சேமித்து வைத்துக் கொண்டு, எப்போது அணைகளில் உபரிநீர் ஏற்படுமோ அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விடுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டு, அதன்விளைவாக குறுவை பயிர்கள் மிகக்கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதன் காரணமாக, சம்பா பயிர் அறுவடையும் தாமதம் ஆகிறது. இக்கட்டான சூழலில் காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்த தீர்வை தாங்கள் அறிவீர்கள். அந்த தீர்வு ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி பிரச்சினையில் இருந்து நழுவி விடுவது போல் உள்ள தீர்வுதான். இந்த தீர்வின் படியோ அல்லது காவிரி நதிநீர் தாவா தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவின்படியோ தமிழ்நாட்டிற்கு கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டிய தண்ணீர் திறந்து விடப்படவில்லை. உடனே கூட்டத்தை கூட்டுங்கள் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மேற்கண்ட தீர்வுமுறையை காவிரி நதிநீர் ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்புவது என்று தனது 24-வது கூட்டத்தில் காவிரி கண்காணிப்பு குழு முடிவு செய்திருந்தது. அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை எந்த நேரத்திலும் நடக்கலாம். காவிரி நதிநீர் ஆணையம் உடனடியாக கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய பிரச்சினையும் இருக்கிறது. அதாவது, கர்நாடகா அரசு தனது நீர்ப்பாசன பரப்பளவை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்று தற்போது நடைமுறையில் இருந்து வரும் காவிரி நதிநீர் தாவா தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவு குறிப்பிட்டுச் சொல்கிறது. ஆனால், கர்நாடகா அரசோ தனது வருடாந்திர நீர்ப்பாசன பரப்பளவு தொடர்பான விவரங்களை தருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை உடனடியாக கூட்டி, மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதத்தில் கூறி உள்ளார். |
'காவிரி ஆணையத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை' பெங்களூர், மே.20- காவிரி ஆணையத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்டவேண்டும் என்று பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுபற்றி கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அவசியம் இல்லை காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகம் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் வழங்கி இருக்கிறது. மத்திய நீர்வள கமிஷனின் நீர் அளவை கணக்கிடும் நிலையமும் உறுதி செய்து இருக்கிறது. காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதைவிட கூடுதலாகவே கடந்த 4 ஆண்டுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. காவிரி நதி நீர்பங்கீட்டு பிரச்சினை இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இதுபற்றி பேசவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். |
தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம் வாபஸ் இல்லை இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகள் வலியுறுத்தல் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டன. அங்கு இந்தியாவின் நிதி உதவியுடன் போருக்கு பிந்தைய மறுவாழ்வுப்பணிகள் நடைபெறுகின்றன. சிங்களர்களைப்போல தமிழர்களும் சம மதிப்புடனும், அந்தஸ்துடனும் வாழ ஏற்ற வகையில், தமிழர்கள் வாழுகிற பகுதிகளிலிருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகின்றன. ராஜபக்சேயால் அமைக்கப்பட்ட நல்லிணக்கக்குழுவும் இந்த பரிந்துரையை செய்துள்ளது. சமீபத்தில் வாஷிங்டனில் தன்னை சந்தித்த இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எம்.பெரீசிடம், இலங்கையில் தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளவேண்டும் என்றும், மனித உரிமையை பாதுகாக்க இன்னும் கூடுதலான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார். வெற்றி விழாவில் ராஜபச்சே இந்த நிலையில், இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் வெற்றியை கொண்டாட கொழும்பில் அரசு விழா எடுத்தது. இந்த விழாவில் ராஜபக்சே பேசியபோது கூறியதாவது:- வடக்கு, கிழக்கு மாகாண பகுதிகளிலிருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று சிலர் சத்தமிட்டு கொண்டிருக்கின்றனர். பிரிவினை திட்டத்தை விடுதலைப்புலிகள் இன்னும் விட்டு விடவில்லை. ராணுவத்தை விலக்க மாட்டேன் தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை விலக்க மாட்டேன். ராணுவத்தை விலக்கி நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்த மாட்டேன். தமிழர் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தில் ராணுவத்தினரின் தலையீடு இல்லை. பல்லாண்டு காலம் போர் நடத்தி, அதன்மூலம் சாதிக்க முடியாததை ஈழத்தீவிரவாதிகள் பிற வழிகளில் சாதிக்க முயற்சித்து வருகின்றனர். போருக்குப்பின் இலங்கையில் நடந்து வருகிற பணிகளை சர்வதேச சமுதாயம் பாராட்ட வேண்டும். நாங்கள் எங்கள் பொறுப்பை தட்டிக்கழித்து விட முடியாது. நல்லிணக்கக்குழுவின் பரிந்துரைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றை நாங்கள் அமல்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். |
சென்னை தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வண்டலூர், மே.20- தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 32 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அரசு பஸ் சென்னை புறநகர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12.35 மணியளவில் விழுப்புரம் பணிமுனைக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தது. பஸ்சை கள்ளக்குறிச்சி தியாகதுருகம் கிராமத்தை சேர்ந்த ஜோதி ராமலிங்கம் (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த பாண்டு (50) நடத்துனராக பணியில் இருந்தார். பஸ் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் `கீர் பாக்ஸ்'சில் இருந்து புகை வர தொடங்கியது. பயங்கர தீ விபத்து பஸ்சில் இருந்து புகை வருவதை பார்த்த, டிரைவர் ஜோதி ராமலிங்கம் பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும்படி டிரைவர் கூறினார். உடனடியாக பயணிகள் 30 பேரும் தங்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக முண்டியடித்து கொண்டு அலறி கொண்டே பஸ்சில் இருந்து ஜன்னல் மற்றும் படி வழியாக கீழே இறங்கி பைபாஸ் சாலையில் ஓடினார்கள். பயணிகள் அனைவரும் கீழே இறங்கியவுடன் பஸ் பயங்கரமாக தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் பஸ்சின் பின்னால் வந்த வாகனங்களில் இருந்தவர்கள் ஆங்காங்கே வண்டியை ஓரமாக நிறுத்தினர். பஸ் எரிவதை பார்த்த பொதுமக்கள் தாம்பரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தந்தனர். 32 பேர் உயிர் தப்பினர் இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம், பூந்தமல்லி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்பு படை வீரர்கள் எரிந்து கொண்டு இருந்த பஸ்சின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் பஸ் டிரைவர், நடத்துனர் உள்பட 32 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக தாம்பரம்-மதுரவாயல் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் பேட்டி தீ விபத்து குறித்து பஸ் டிரைவர் ஜோதி ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஓட்டிச்சென்றேன். பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றபோது கீர் பாக்சில் இருந்து திடீர் என்று புகை வந்தது. அந்த புகை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது. அதனால் உடனே பஸ்சை நிறுத்திவிட்டு பயணிகளை அவசரமாக கீழே இறங்கும்படி கூறினேன். கண்டக்டர் பாண்டுவும் பயணிகளை கீழே இறங்கும்படி தெரிவித்தார். அதனால் பயணிகள் அனைவரும் கீழே இறங்கினார்கள். அதற்கு பிறகுதான் நாங்கள் கீழே இறங்கினோம். நாங்கள் இறங்கியதும் புகை அதிகரித்து தீப்பிடித்தது. உடனே தீயணைப்பு படையினருக்கும், எங்கள் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தோம். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்துவிட்டது. எப்படியோ பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்தனர். இவ்வாறு டிரைவர் ராமலிங்கம் தெரிவித்தார். |
சென்னையில் மாவோயிஸ்டு தீவிரவாதி கைது சென்னை, மே.20- சென்னையில் மாவோயிஸ்டு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். அவரது மனைவி தப்பி ஓடிவிட்டார். மாவோயிஸ்டு ஆதிக்கம் வடமாநிலங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. சத்தீஸ்கார் மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ்பால் மேனன் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்திலும் தங்கள் தளத்தை அமைக்க மாவோயிஸ்டுகள் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆயுத பயிற்சி கடந்த 2007-ம் ஆண்டு பெரியகுளம், தேனி பகுதியில் உள்ள முருகமலை காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுடும் பயிற்சி தளம் அமைத்து பயிற்சி பெற்றனர். அப்போது போலீசார் அதிரடி வேட்டை நடத்தி, மாவோயிஸ்டுகள் அமைப்பின் தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட 4 பேரை கைது செய்தனர். மாவோயிஸ்டு அமைப்பின் பொதுச்சொயலாளராக இருந்த விவேக் (வயது 45) என்பவர் தப்பி ஓடிவிட்டார். கோர்ட்டு பிடிவாரண்டின் பேரில் கியூ பிரிவு போலீசார் விவேக்கை தேடி வந்தனர். விவேக் கைது-மனைவி ஓட்டம் விவேக்குக்கு பாலன், குமார், ஆனந்தன் என்ற வேறு பெயர்களும் உண்டு. விவேக் நேற்று காலையில் சென்னை அண்ணாநகர் ஷெனாய் நகர் பகுதியில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் தனது மனைவி பத்மா(36)வுடன் கலந்து கொண்டுள்ளார் என்ற தகவல் கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமாருக்கு கிடைத்தது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் ஷெனாய் நகர் பகுதியில் மாறுவேடத்தில் முற்றுகையிட்டனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, வெளியே வந்தபோது விவேக்கை கியூ பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். ஆனால் அவரது மனைவி பத்மா தப்பி ஓடிவிட்டார். கோர்ட்டில் ஆஜர் கைதான விவேக்கை போலீசார் உடனடியாக வேனில் ஏற்றி பெரியகுளம் கொண்டு சென்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். விவேக்கிடம் போலீஸ் வேனில் வைத்தே தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரை பின்னர் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய விவேக்கின் மனைவி பத்மாவும் மாவோயிஸ்டு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்தான். 2004-ம் ஆண்டு ஊத்தங்கரையில் வைத்து போலீசார்-மாவோயிஸ்டு துப்பாக்கி சண்டை நடந்தபோது, பத்மாவும் அதில் ஆவேசமாக போலீசாருடன் சண்டை போட்டு, பின்னர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இப்போது தப்பி ஓடிவிட்ட அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். மாவோயிஸ்டு தீவிரவாதி விவேக் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
சென்னையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் 2 வாலிபர்கள் கைது சென்னை, மே.20- சென்னையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மான் வேட்டையில் புலி சிக்கியது போல... சென்னையில் போலி கிரெடிட் கார்டு கும்பலை வேட்டையாடி பிடித்தபோது, கள்ள நோட்டு ஆசாமியும் சிக்கினான். மான் வேட்டையில் புலி சிக்கியது போல, இந்த சம்பவம் நடந்தது. சென்னை அண்ணாசாலையில் உள்ள வங்கி ஒன்றிற்கு போலி கிரெடிட் கார்டுகளுடன் ஆசாமி ஒருவன் வந்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங், துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் ஜான்ரோஸ் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். அண்ணாசாலையில் உள்ள குறிப்பிட்ட வங்கியை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கு நின்றிருந்த போலி கிரெடிட் ஆசாமியை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து 24 போலி கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிகண்டன் அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அவரது பெயர் மண்கண்டன் (வயது 27). புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள மூக்கன்பட்டியைச் சேர்ந்தவர். 10-வது வகுப்பு வரை படித்துள்ள மணிகண்டன் போலி கிரெடிட் கார்டுகளை தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போலீசார் மணிகண்டனை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டில் சோதனை போட்டார்கள். அந்த சோதனையில் போலி கிரெடிட் கார்டுகள் தயாரிக்கப் பயன்படும் `என்கோடர் கருவி' மற்றும் `லேப்-டாப்' ஆகியவையும் அங்கு கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது வீட்டில் இருந்து ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. கள்ள நோட்டுகளையும் மணிகண்டன் புழக்கத்தில் விடுவது தெரிய வந்தது. கள்ள நோட்டுகளை கொடுத்தது யார்? என்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள பெரோஸ் (29) என்பவர் ரூ.60 ஆயிரம் உண்மையான ரூபாய் நோட்டுகளுக்கு, ரூ.1 லட்சம் கள்ள நோட்டுகள் கொடுத்தார் என்றும், ரூ.1 லட்சம் கள்ள நோட்டுகளில் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை மாற்றி புழக்கத்தில் விட்டுவிட்டேன் என்றும் மணிகண்டன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். பெரோஸ் சிக்கினார் போலீசார் அடுத்து அதிரடியாக சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள பெரோஸ் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதன்பேரில் பெரோஸ் கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே கள்ள நோட்டு வழக்கில் ஜெயிலுக்கு போய் இருக்கிறார். ஜெயிலில் உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கள்ள நோட்டு சப்ளை ஆசாமி தாரிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஜெயிலில் இருந்து விடுதலையானவுடன் தாரிக், பெரோஸை உ.பி. அழைத்துச் சென்றார். அங்கு மேலும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வாரி வழங்கினார். மொத்தம் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை வாங்கிக் கொண்டு பெரோஸ் சென்னை வந்தார். மணிகண்டனிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கொடுத்தார். ரூ.1 லட்சத்தை தன்னிடம் வைத்துக் கொண்டு, மீதி ரூ.1.5 லட்சத்தை பெங்களூரைச் சேர்ந்த முன்னா என்பவரிடம் கொடுத்ததாக பெரோஸ் போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை சொன்னார். ஜெயிலில் அடைப்பு மணிகண்டன், பெரோஸ் இருவரும் கள்ள நோட்டு மற்றும் போலி கிரெடிட் கார்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். கள்ள நோட்டுகளை சப்ளை செய்த தாரிக் மற்றும் பெங்களூர் ஆசாமி முன்னா ஆகியோரை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது. |
சென்னையில் மாவோயிஸ்டு தீவிரவாதி பிடிபட்டது எப்படி? - ஓர் அலசல் சென்னை, மே.20- சென்னையில் பதுங்கியிருந்த, பெரியகுளத்தில் ஆயுதப்பயிற்சி அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த, மாவோயிஸ்ட் அமைப்பின் மாநில செயலர் விவேக்கை, "கியூ' பிரிவு போலீசார் நேற்று சுற்றி வளைத்துப் பிடித்தனர். ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது, மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் அமைப்பிரை ஒடுக்கும் முயற்சியில், அந்தந்த மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. சி.ஆர்.பி.எப்., சார்பில் "ஆபரேசன் கிரீன் ஹன்ட்' என்ற பெயரில் நக்சல்களை ஒடுக்க, மிகப்பெரிய ஆபரேசன் நடந்து வருகிறது. வனப்பகுதிகள் கண்காணிப்பு சமீபத்தில், சத்தீஸ்கரில், சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டன. மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்தால், தெற்கு நோக்கி அதாவது, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளாவில் அவர்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டலாம் என்ற தகவலை, மத்திய அமைச்சர் ஒருவரே கூறியதால், நான்கு மாநிலங்களின் வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தர்மசாலாவில் முகாம் கடந்த சில மாதங்களுக்கு முன், கிருஷ்ணகிரியில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து கிடைத்த ஆவணங்கள் மூலம் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகளின் பின்னணியில் இருந்து மாவோயிஸ்ட், நக்சல் தலைவர்கள் இயங்கி வருவது ஊர்ஜிதமானது. தொடர்ந்து, கர்நாடக மாநிலம், தர்மசாலா வனப்பகுதியில், ஆயுதப்பயிற்சி மற்றும் முகாம் நடத்தப்படுவது குறித்து, போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சோதனையிடப்பட்டது. அப்போது, அங்கிருந்து 30க்கும் மேற்பட்டோர் தப்பியோடினர். அங்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி இலக்கிய புத்தகங்கள் மற்றும் ஆயுதப்பயிற்சி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 18 ஆண்டுகளுக்குப் பின் கைது அதன்பின், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த மாதம் மதுரையில் 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த, வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய இளங்கோ (எ) சந்திரசேகரன், 50, என்ற மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு ரகசிய தகவல்கள் "கியூ' பிரிவு போலீசாருக்கு கிடைத்தன. இவற்றை கொண்டு பல்வேறு பகுதிகளில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இளங்கோ சார்ந்த அமைப்பான, சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பின், மாநில செயலரான விவேக் (எ) பாலன் (எ) ராஜாமணி (எ) குமார்,29 என்பவர் குறித்த தகவல் "கியூ' பிரிவினருக்கு கிடைத்தது. சென்னையில் மாவோயிஸ்ட் கைது சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த விவேக், கடந்த 2007ம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் வனப்பகுதியில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட மற்றும் பயிற்சி அளித்த வழக்கில், தலைமறைவாக இருந்தார். இவர், சென்னை அமைந்தகரை அடுத்த, ஷெனாய் நகரில் ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உஷாரான "கியூ' பிரிவினர், அப்பகுதியில் மாறுவேடத்தில் கடந்த ஒரு வாரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, விவேக்குடன் ஒரு பெண் இருந்தார். நேற்று அதிகாலை, அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தபோது, அப்பெண் தப்பியோடிவிட்டார். விவேக் மட்டும் சிக்கினார். அவரிடம் "கியூ' பிரிவினர் நடத்திய விசாரணையில், தங்கியிருந்தது பத்மா (எ) சத்தியமேரி என்பது தெரியவந்தது. பெண் மாவோயிஸ்ட் "எஸ்கேப்' இவர், கடந்த 2006ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நடந்த போலீஸ், மாவோயிஸ்ட் மோதல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும், அங்கிருந்து தப்பி தலைமறைவாக இருந்த நிலையில், விவேக்குடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு, இங்கு வாழ்ந்ததும் தெரியவந்தது. விவேக்கை கைதுசெய்து, "கியூ' பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு வைத்து விசாரணை நடத்தி, தற்போது பெரியகுளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க உள்ளனர். அதன் பின், மீண்டும் தங்கள் வசம் எடுத்து விசாரிக்கின்றனர். இது தவிர தப்பியோடிய பத்மாவை பிடிக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். |
©2012 |