Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

* இங்கிலாந்தில் இந்தியர் மீது தாக்குதல் * தமிழகம் முழுவதும் தங்கத்திற்கு ஒரே விலை * மேற்கு வங்காளத்தில் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு * சரத் பொன்சேகா திடீர் கைது

இன்றைய முக்கிய செய்திகள்

Download latha tamil font


South Indian Crime Point as your Homepage

முக்கிய செய்திகள் (09-02-2010) காலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,



இங்கிலாந்தில் இந்தியர் மீது தாக்குதல்

இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் இந்தியரான பாரத் உபத்யாய் கடந்த 4 மாத காலமாக டாக்சி ஓட்டி வருகிறார். இவரது டாக்சியில் ஏறிய 2 பேர் பிரான்ஸ்டோன் பிரித்திற்கு செல்லுமாறு கூறினார். அவர்கள் கூறிய இடம் வரவே, வண்டியை நிறுத்திய உபத்யாய், அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் உபத்யாயை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் உபத்யாயின் கண்கள், கழுத்துப்பகுதி மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே உபத்யாய் கூச்சல் போட்டதால், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் சற்று தணிந்துள்ள நிலையில் இங்கிலாந்தில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பொன்சேகா திடீர் கைது

இலங்கை முன்னாள் ராணுவ தலைமை தளபதியும், அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டியதாகவும், ராஜபக்சேயையும், அவரது குடும்பத்தினரையும் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும் இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்தநிலையில், பொன்சேகாவை ராணுவ போலீசார் கைது செய்தனர். இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக இலங்கை அரசு மீது சர்வதேச கோர்ட்டில் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்கப்போவதாக சரத் பொன்சேகா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். இதைத்தொடர்ந்து, இரவு பொன்சேகா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • தமிழகம் முழுவதும் தங்கத்திற்கு ஒரே விலை

    தமிழகம் முழுவதும் இனி ஒரே மாதிரியான விலையில் தங்கத்தை விற்பது என, தமிழக தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழக தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சென்னையில் விற்கப்படும் விலையிலேயே, தமிழகத்தின் பிற பகுதிகளில் தங்க நகைகளை விற்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன் மதுரை, திருச்சி, கோவை என வெவ்வேறு இடங்களிலும் தங்கத்தின் விலையில் சிறு மாற்றம் இருந்து வந்தது. இனி தமிழகத்தின் எல்லா இடங்களில் ஒரே விலையில் தங்க நகைகளை வாங்கலாம்.

    ஆம்பூரில் விஷ வாயு தாக்கி 2 பேர் பரிதாப சாவு

    வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள மளிகை தோப்பு பகுதியில் தோல் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பம்ப்ஹவுஸ் தொட்டியில் உள்ள மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அந்த தொட்டிக்குள் இறங்கி மோட்டாரை கழற்றி சரிபார்க்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் நெடுஞ்செழியன்(வயது 40), ஆபரேட்டர் மனோகரன்(40) இருவரும் கழிவுநீர் தொட்டி மூடியை திறந்து விட்டு உள்ளே இறங்கினர். அப்போது திடீர் என அவர்களை விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மூச்சுதிணறி தொட்டிக்குள் இறங்கிய நிலையிலேயே பரிதாபமாக செத்தனர். சம்பவம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • இன்றைய செய்திப் புகைப்படங்கள்











    12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் சென்னையில் கண்டுபிடிப்பு

    'பிரவுசிங்' சென்டரின் கண்காணிப்பு, 'கேமரா' உதவியுடன், 12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை போலீசார் கண்டுபிடித்தனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற ஊரைச் சேர்ந்தவர் கொருத்து(60). இவரின் மகன் ஜிம்மி கொருத்து(31) கடந்த 1998ம் ஆண்டு காணாமல் போனார்.தன் மகன் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆனநிலையில், இணையதளத்தில் அவரின் மின்னஞ்சல் முகவரி இருப்பது குறித்து, கேரள சைபர் கிரைம் போலீசாருக்கு கொருத்து தகவல் கொடுத்தார். விசாரித்ததில், அந்த மின்னஞ்சல் முகவரி, சென்னை அடையாறு பகுதியில் உருவாக்கப்பட்டது தெரியவந்தது. கொருத்து கொடுத்த புகாரின் பெயரில், ஜே-5, சாஸ்திரி நகர் போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கஜபதி தலைமையிலான தனிப்படை போலீசார், அடையாறு சரகத்தில் உள்ள அனைத்து 'பிரவுசிங்' சென்டர்களையும் கண்காணித்து வந்தனர்.

    அப்போது, அடையார் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு 'பிரவுசிங்' சென்டருக்கு, ஜிம்மி கொருத்து வந்து சென்றது, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 'பிரவுசிங் சென்டர்' வருகை பதிவேட்டில் ஜிம்மி கொருத்து கொடுத்திருந்த இருப்பிட முகவரிக்கு சென்ற போலீசார், அங்கிருந்த ஜிம்மி கொருத்துவை அவரின் தந்தையிடம் ஒப்படைத்தனர்.

    விலைவாசி உயர்வுக்கு சரத்பவாரின் இலாகாதான் காரணம்: காங்கிரஸ் மறைமுக குற்றச்சாட்டு

    டெல்லியில் பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ்திவாரி, விலைவாசி உயர்வு தொடர்பான சரமாரி கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர், "விலை உயர்வு சம்பந்தப்பட்ட விவகாரங்கள், விவசாயம், உணவு வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகங்களின் பொறுப்பில் உள்ளதாக'' குறிப்பிட்டார். இந்த துறைகள் அனைத்தும், காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேவை சரத்பவார் சந்தித்து பேசியதற்கு அடுத்த நாளில், காங்கிரஸ் கட்சி இந்த கருத்தை வெளியிட்டு இருக்கிறது.

  • மீனவர்கள் மோதல் : படகுகளுடன் சிறை பிடிப்பு

    நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான உவரி, பெரியதாழை மீனவர்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. பெரியதாழை மீனவர்கள், 'சுருக்கு மடி' எனப்படும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாகவும், இதனால், அவர்களுக்கு பாறமீன் அதிகளவில் கிடைத்துள்ளதாகவும் உவரி மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது. கடலுக்குள் சென்ற உவரி மீனவர்கள், பெரியதாழை மீனவர்கள் 20 பேரை இரண்டு படகுகள், வலைகளுடன் சிறை பிடித்து உவரிக்கு கொண்டு வந்தனர். பின், அவர்களை விடுவித்தனர். இதே போல பெரியதாழை மீனவர்கள், உவரி மீனவர்களை சிறை பிடித்தனர். இது தொடர்பாக போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர், இரு தரப்பையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு: மன்மோகன்சிங் மீது பா.ஜனதா கடும் தாக்கு

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் என்று குற்றம் சாட்டிய பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி, பிரதமர் மன்மோகன்சிங் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மக்களால் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட பெரிய பொருளாதார மேதை (மன்மோகன்சிங்)க்கு கிடைத்துள்ள பெரிய தோல்வி இது. `இரட்டை இலக்க' பொருளாதார வளர்ச்சிக்கு சூளுரைத்த மன்மோகன்சிங், தற்போது மக்களுக்கு இரட்டை இலக்க பணவீக்க சுமையை ஏற்படுத்திவிட்டார். அவர் நிதி மந்திரியாக பொறுப்பு வகித்தபோதும் இதே போன்ற பணவீக்க விகிதம் இருந்தது. வரலாறு காணாத விலையேற்றத்துக்கு பிரதமர் உள்ளிட்ட அனைத்து மத்திய மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய அனைவருமே கூட்டு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறினார்.











  • புதுச்சேரி சட்டசபை 17ம் தேதி கூடுகிறது

    புதுச்சேரி சட்டசபை, வரும் 17ம் தேதி கூடுகிறது. புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடர் துவங்கும் தேதி தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கவர்னர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சட்டசபை கூடும் தேதி குறித்து நேற்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. புதுச்சேரி சட்டசபை செயலர் சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'புதுச்சேரி சட்டசபை வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை மண்டபத்தில் கூட்டப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் உரையுடன் சட்டசபை துவங்குகிறது. அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள் தொடர்பாக கவர்னர் இக்பால்சிங் உரையாற்றுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு

    முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து இருக்கிறது. இந்த நிலையில், இந்த சிபாரிசுப்படி முதல் முறையாக மேற்கு வங்காள அரசு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடை அறிவித்து உள்ளது. முஸ்லிம் மக்களில் சமூக, பொருளாதார மற்றும் கல்விரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, மேற்கு வங்காள முதல்-மந்திரி பட்டாச்சார்யா அறிவித்தார். மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய 10 சதவீத ஒதுக்கீடு மூலம் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு 17 சதவீதமாக அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    நேற்றைய செய்திகள்

    Bookmark and Share
  • Read More     Comments (33)