Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

* புதிய சட்டசபை கட்டிடம்: இன்று மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார் * மகளிர் மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்: லாலு பிரசாத் அறிவிப்பு * டெல்லியில் ரஷிய அதிபர் புதின்-மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை * தமிழக கோயில்களில் இன்று மகா சிவராத்திரி

இன்றைய முக்கிய செய்திகள்

Download latha tamil font


South Indian Crime Point as your Homepage

முக்கிய செய்திகள் (13-03-2010) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

புதிய சட்டசபை கட்டிடம்: இன்று மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார்

நாடே பார்த்து வியக்கும் வகையில், தமிழகத்தின் புதிய சட்டமன்றம்- தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் கருணாநிதி 50 ஆண்டுகள் உறுப்பினராக இருந்ததன் பொன்விழா கொண்டாடப்பட்டபோது, இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தமிழகத்தின் புதிய சட்டமன்ற, தலைமைச் செயலக கட்டிட வளாகம், சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 12.11.2008 முதல் கட்டப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டன.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட், புதிய சட்டசபையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி விரும்பினார். அதற்கேற்ப, சட்டமன்ற கட்டிடம் சென்னையில் வைரக் கல்லாக ஜொலிக்கும் வகையில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில், வரும் 19-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக கட்டிடத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கும், இந்த சட்டப்பேரவை - தலைமைச் செயலக வளாக கட்டிடத்தை பிரதமர் மன்மோகன்சிங் இன்று மாலை திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் இந்த விழா கோலாகலமாக நடக்கிறது. விழாவுக்கு சோனியாகாந்தி, கவர்னர் பர்னாலா தலைமை வகிக்கிறார்கள்.

இதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத், கர்நாடக முதல்-மந்திரி எடிïரப்பா, ஆந்திர முதல்-மந்திரி ரோசய்யா, புதுச்சேரி முதல்-மந்திரி வைத்திலிங்கம், தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.35 மணிக்கு வந்து சேரும் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோர், அங்கிருந்து காரில் புறப்பட்டு 5 மணிக்கு சட்டசபை-தலைமைச் செயலக வளாகத்துக்கு வருகின்றனர். பிரதமர், முதலில் மரக்கன்றுகளை நடுகிறார். அதன்பிறகு, பிரதமர், சோனியா ஆகியோர் சட்டசபை வளாகத்தை பார்வையிட்டுவிட்டு, மேடைக்குச் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். மாலை 5 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழா முடிந்ததும் மாலை 6.05 மணிக்கு மன்மோகன்சிங்கும், சோனியாவும் கார் மூலம் விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்கிறார்கள். 6.30 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

இந்த திறப்புவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையையொட்டி, சென்னையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விழா நடக்கும் பகுதி மத்திய படை மற்றும் மாநில போலீஸ் படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது.

விழா நடக்கும் நேரமான மாலை 5 மணி முதல் 6 மணி வரை பறக்கும் ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலையில் மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து பல்லவன் சாலை சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபை வளாக கட்டிடம் பார்ப்பதற்கு பிரமாண்டமான தோற்றத்தில் கண்ணை கவரும் விதத்தில் காட்சி அளிக்கிறது.

அரசினர் தோட்டத்தில் அமைக்கப்படும் புதிய சட்டமன்றம், தலைமைச் செயலகங்கள் கட்டிடப் பணி இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற வளாகம் `பிளாக் ஏ' என்றும், தலைமைச் செயலக வளாக கட்டிடம் `பிளாக் பி' என்றும் அழைக்கப்படுகின்றன. இதில், `பிளாக் ஏ' பகுதியில் சட்டமன்ற வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிளாக் பி பகுதியில் தலைமைச் செயலக அலுவலகங்கள் (7 மாடி கட்டிடங்கள் ஏழு) கட்டப்பட்டு வருகின்றன.

"பிளாக் ஏ" பகுதியில் வட்ட வடிவத்தில் அமைந்த 6 மாடி கட்டிடங்கள் நான்கு கட்டப்பட்டுள்ளன. இதுதான் சட்டமன்ற வளாகம். இது ரூ.427 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில், வட்ட வடிவத்திலான 4 கட்டிடங்கள் வரிசையாக கட்டப்பட்டுள்ளன.

இதில் பொது வளாகம்தான் பெரிய கட்டிடம். அதற்கு அடுத்தபடியாக சட்டமன்ற கட்டிடம் அளவில் பெரிதாகும். அதற்கு அடுத்த பெரிய கட்டிடம் நூலக வட்டம் ஆகும். இதில், சட்டத்துறை அலுவலகம் அமைந்திருக்கும். நான்காவதாகவும், சிறியதாகவும் முதல்-அமைச்சரின் அலுவலகம் (முதல்-அமைச்சர் வட்டம்) அமைந்துள்ளது. இதுதான் அளவில் சிறியது. இந்த 4 வட்ட வடிவ கட்டிடங்களின் அளவு இறங்குவரிசையில் குறைந்துகொண்டே வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4 கட்டிடங்களை குறிக்கும் வகையில் நுழைவாயிலில் 4 நீரூற்றுகள், அந்தந்த கட்டிடங்களின் பரப்பளவு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு வட்ட வடிவ கட்டிடங்கள் வரிசையாக 9 லட்சம் சதுர அடிபரப்பில் கட்டப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் கட்டிடம்தான் இதில் சிறியது. பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் எளிமையாக இருக்கவேண்டும் என்பதை காட்டுவதாக இருக்கவேண்டும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி சொல்லியதால், முதல்-அமைச்சரின் நிர்வாக அலுவலகம் அமையும் கட்டிடம் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பொது வளாக கட்டிடத்தில், இந்தியாவில் முதல்முறையாக எந்த ஒரு பெரிய அரசு கட்டிடத்திலும் இல்லாதவகையில், பொதுமக்கள் பெரிய கட்டுப்பாடுமின்றி எளிதில் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த இடம் சுற்றுலா தலம் போல் விளங்கும்.

சட்டமன்ற வளாகத்தில் 4 கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கான பின்னணி சுவாரசியமானது. ஒரு வட்டம் பொதுமக்களையும் (பொதுவளாகம்), அடுத்த 3 வட்டங்கள் ஜனநாயகத்தின் 3 தூண்களான சட்டசபை (சட்டசபை வளாகம்), நீதித்துறை (நூலக வளாகம்) மற்றும் நிர்வாகத்தை (முதல்-அமைச்சர் வட்டம்) குறிக்கின்றன.

இதுதவிர, சட்டசபை கட்டிடத்தின் மீது, 100 அடி உயர பிரமாண்ட கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டமன்ற கட்டிடத்தின் தரைத்தளத்தில் வெளிச்சம் நேரடியாக விழும். இந்த சட்டமன்ற- தலைமைச் செயலக கட்டிடத்தை 4 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு, பகலாக பாடுபட்டு உழைத்து உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு, முதல்- அமைச்சர் கருணாநிதி நாளை, பிரியாணி விருந்து அளித்து உபசரிக்கிறார்.

  • தமிழக கோயில்களில் இன்று மகா சிவராத்திரி

    தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில், இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.ஆண்டுதோறும், மகா சிவராத்திரி விழா, மாசி அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று கொண்டாடப்படும். இந்த ஆண்டு மாசி அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி, தை மாதமே வந்து விட்டது. மாசி மாத தேய்பிறை சதுர்தசி திதி, பங்குனி அமாவாசைக்கு முன்னதாக வருகிறது. இதனால், மகா சிவராத்திரியை கொண்டாட, மாசி அமாவாசையை கணக்கில் கொள்வதா, மாசி தேய்பிறை சதுர்த்தசி திதியை கணக்கில் கொள்வதா என்ற குழப்பம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டது.இதில், இருவித கருத்து நிலவியதால், இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான சிவன் கோவில்களிலும், தமிழகத்தில் உள்ள ஒரு சில கோவில்களிலும் கடந்த மாதமே மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மயிலை கபாலீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் மிகப் பெரும்பான்மையான கோவில்களில் மகாசிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: கோல்கட்டா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி

    மூன்றாவது ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கோல்கட்டா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது. அந்த அணியின் ஓவைஸ் ஷா 58, மேத்திவ்ஸ் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.தொடர்ந்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 20 ஓவரின் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 150 ரன் மட்டுமே எடுத்தது. இதையடுத்து கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 11 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

  • பாராளுமன்றத்தில் திட்டவட்ட அறிவிப்பு; பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை-பிரணாப் முகர்ஜி

    மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக, பெட்ரோல்-டீசல் விலை உடனடியாக உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், இந்த முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    பட்ஜெட் தொடர்பாக 2 நாட்கள் நடைபெற்ற பொது விவாதத்திற்கு பதில் அளித்து நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது அவர், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

    இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதுதான் என்றாலும், நாட்டின் நிதி நிலைமை காரணமாக, விலை உயர்வை திரும்பப்பெற முடியாத நிலை இருப்பதாக விளக்கம் அளித்த பிரணாப் முகர்ஜி, அதற்காக தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்றும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

    தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    பிரணாப் முகர்ஜி தனது பதில் உரையில் மேலும் கூறியதாவது-

    "நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் கோடை கால சாகுபடி உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், கடந்த 5 மாதங்களாக தொழில் துறையில் அடைந்துள்ள இரட்டை இலக்க வளர்ச்சி காரணமாக நமது பொருளாதார நிலைமை மேம்பட்டு வருகிறது.

    பட்ஜெட்டில் உற்பத்தி வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருப்பது, பணவீக்க பிரச்சினையில் சில சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன''.

    இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

    பிரணாப் முகர்ஜி பதில் அளித்து பேசியதும் அவரிடம் சென்ற முன்னாள் நிதி மந்திரியும் பா.ஜனதா தலைவருமான யஷ்வந்த்சின்கா, பெட்ரோலிய பொருட்களின், குறிப்பாக டீசல் விலை உயர்வு முடிவையாவது மறு பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

    சேலத்தில் சிறு‌மியை கற்பழித்துக் கொலை செய்த காமக் கொடூரனுக்கு மரண தண்டனை

    சேலத்தில் சிறு‌மியை கற்பழித்துக் கொலை செய்த காமக் கொடூரனுக்கு மரண தண்டனை அளித்து சேலம் மாவட்டம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட் தீர்ப்பளித்தது. சேலம் பூலாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு பழநியம்மாள் (9) என்ற மகள் இருந்தார். கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி பழநியம்மாளின் பெற்றோர்கள் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். அப்போது பழநியம்மாளை அவரது தாத்தா வீட்டில் விட்டுச் சென்றனர். 12ம் தேதியன்று பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. மறுநாள் ஊர் கடைசியில் இருந்த பாக்கு மரத்தடியில் பிணமாக கிடந்தது தெரிந்தது. போலீஸ் விசாரணையில் பழநியம்மாளை, பூலாம்பட்டியை சேர்ந்த முருகன் (35), கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த முருகனுக்கு மரண தண்டனை அளித்த நீதிபதி உத்தரவிட்டார்.

  • நடிகை சோனியா அகர்வால் - இயக்குநர் செல்வராகவன் விவாகரத்து

    நடிகை சோனியா அகர்வால், இயக்குநர் செல்வராகவனுக்கு விவாகரத்து அளித்து சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டது. 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சோனியா-செல்வராகவன் கடந்த ஒரு ஆண்டு காலமாக பிரிந்து வாழ்ந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இருவரும் மனமொத்து பிரிவதாக தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு நேற்று சென்னை குடும்ப நல ‌கோர்‌ட்டில் விவகாரத்து அளிக்கப்பட்டது.

    ராணுவ பணிக்கு ஏப்ரல் 5ம் தேதி ஆட்கள் தேர்வு

    ராணுவ படை வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 5ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. தர்மபுரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவி இயக்குனர் மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கை: ராணுவ படைவீரர், படைவீரர் டெக்னிக்கல், படைவீரர், ட்ரேட்ஸ்மென்ட் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு வரும் 5ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

    இதில் முன்னாள் படைவீரர்களின் மகன்கள், போரில் மரணமுற்ற ராணுவ வீரர்களின் மகன்கள் கலந்து கொள்ளலாம். படைவீரர் பொது பணிக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதினேழரை வயது முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ராணுவ வீரர் டெக்னிக்கல் பணிக்கு ப்ளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணக்கு, ஆங்கில பாடங்களை படித்திருக்க வேண்டும். வயது பதினேழரை வயது முதல் இருபத்து மூன்றரை வரை இருக்க வேண்டும். படைவீரர் ட்ரேட்ஸ்மேன்ஸ்க்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 23 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். உடற்தகுதியை பொறுத்த வரை உயரம் 166 செ.மீ., மார்பளவு 77-82 மற்றும் உடல் எடை 50 கிலோவாக இருக்க வேண்டும்.

    தேர்வில் உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 வயதை கடக்காதவராக இருந்தால் 10 ரூபாய்க்கான உறுதிச்சான்று நோட்டரி வக்கீல் மூலம் பெற்றிருக்க வேண்டும். ஆள் தேர்வுக்கு செல்லும் போது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் இரு பிரதி நகல்கள் எடுத்து செல்ல வேண்டும். தேர்வு வரும் 5ம் தேதி காலை 5 மணிக்கு எம்.இ.ஜி., மைதானத்தில் ஆஜராகி கலந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • மகளிர் மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்: லாலு பிரசாத் அறிவிப்பு

    டெல்லியில் லாலு பிரசாத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பொறுத்தமட்டில் எங்கள் கட்சியின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

    பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

    மகளிர் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி தான் நாங்கள் போராடி வருகிறோம்.

    எங்களுடைய இந்த போராட்டம் தொடரும். இவ்வாறு லாலு பிரசாத் கூறினார்.

    சுகாதார குறைபாட்டை கண்டித்து பெண் கவுன்சிலர் வீடு முற்றுகை

    நெல்லையில் தி.மு.க.,பெண் கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி 25வது வார்டு தி.மு.க.,பெண் கவுன்சிலராக இருப்பவர் மெட்டில்டா ஜோசப். இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்டவை பராமரிக்கப்படாமல் அடிப்படை வசதிகள் குறைபாடு உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலரிடம் புகார் கொடுத்திருந்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 'ஆதித்தமிழர் பேரவை' என்ற கட்சியினர் பெருமாள்புரத்தில் உள்ள மெட்டில்டாஜோசப் வீட்டுமுன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

    டெல்லியில் ரஷிய அதிபர் புதின்-மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை

    ரஷிய அதிபர் புதின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருடன் மந்திரிகள், உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றும் வந்து உள்ளது.

    விமான நிலையத்தில் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீலை புதின் சந்தித்து பேசினார்.

    பின்னர் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு, தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

    அப்போது ராணுவம், அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

    தொழில் நகரங்களை தாக்க மாவோயிஸ்டுகள் சதி திட்டம்; கொல்கத்தாவில் கூடுதல் பாதுகாப்பு

    மாவோயிஸ்டு தீவிரவாதிகள் இந்தியாவில் 6 மாநிலங்களில் மிக வலுவாக உள்ளனர்.

    அவர்களை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த தொடங்கி உள்ளது. துணை நிலை ராணுவமும் உள்ளூர் போலீசாரும் இணைந்த கூட்டுப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க மாவோயிஸ்டுகள் புதிய சதி திட்டங்களை வகுத்துள்ளனர். இதுவரை அடர்ந்த காட்டுக்குள் இருந்து தாக்குதல் நடத்தி வந்த அவர்கள் இனி நகர்ப்பகுதிகளிலும் தங்கள் கைவரிசையைக் காட்ட முடிவு செய்துள்ளனர்.

    குறிப்பாக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தாக்குதல்கள் நடத்த மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக அவர்கள் 129 பக்கம் கொண்ட ஆவணம் தயாரித் திருந்தனர். அதில் ஒரு பிரதி பாதுகாப்புப் படையிடம் சிக்கியுள்ளது.

    அந்த ஆவணத்தில் குர்கான், மும்பை, புனே, ஆமதாபாத், சூரத், கொல்கத்தா, பிலாய், ராஞ்சி, தன்பாத் உள்பட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தாக்குதலுக்கு முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய தொழில் உலகை ஒரு உலுக்கு உலுக்கி விட முடியும் என்று மாவோயிஸ்டுகள் நினைக்கிறார்கள்.

    போக்குவரத்து, தொலை தொடர்பு, ரெயில்வே, துறை முகம், மின்சாரம், எண்ணை வளம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த மாவோயிஸ்டுகள் தனித்தனி பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளனர். தங்கள் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்து, கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தி கொண்ட பிறகே பெரிய தாக்குதல்களை தொடங்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருப்பது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    உளவுத்துறையும் இது தொடர்பாக விரிவான அறிக்கை கொடுத்து எச்சரித்துள்ளது. இதையடுத்து மாவோயிஸ்டுகளை கண்காணிக்க கூடுதல் படைகள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன.

    இதற்கிடையே கொல்கத்தாவில் தாக்குதல் நடத்தப்போவதாக மாவோயிஸ்டுகள் தலைவர் கிஷன்ஜி மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் கொல்கத்தாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முக்கிய அரசு அலுவலகங்களில் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    நேற்றைய செய்திகள்

    Bookmark and Share
  • Read More     Comments (33)