Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

* பாராளுமன்றத்தில் ரகளை: துணை ஜனாதிபதியிடம் எம்.பி.க்கள் மன்னிப்பு * வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகை அதிகரிப்பு * 'தி ஹர்ட் லாக்கர்' படத்துக்கு ஆறு ஆஸ்கர் விருதுகள் * ஜனாதிபதியுடன் லாலு பிரசாத் சந்திப்பு

இன்றைய முக்கிய செய்திகள்

Download latha tamil font


South Indian Crime Point as your Homepage

முக்கிய செய்திகள் (09-03-2010) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதில் இழுபறி : ஆதரவை வாபஸ் பெற்றனர் லாலு, முலாயம்

ராஜ்ய சபாவில் நேற்று பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, லாலு, முலாயம் கட்சி எம்.பி.,க்கள் கடும் ரகளையில் இறங்கினர். ஓட்டெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், மசோதா நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மேலும், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு அளித்த வந்த ஆதரவையும் லாலு, முலாயம் வாபஸ் பெற்றனர்.

ராஜ்ய சபா நேற்று காலை 11 மணிக்கு துவங்கியதும், சில விவகாரங்களை உறுப்பினர்கள் எழுப்பியதால், கூச்சல், குழப்பம் நிலவியது. உடன், 12 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போதும், இதே நிலை நீடித்ததால், மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இரு முறை ஒத்தி வைக்கப்பட்டு, மதியம் 2 மணிக்கு கூடிய போது, சபைத் தலைவர் அன்சாரி இருக்கையில் வந்தமர்ந்தார். அவர் வந்த சில வினாடிகளில், எம்.பி.,க்கள் புடைசூழ சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி வந்து அமர்ந்தார்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யும்படி அமைச்சர் வீரப்ப மொய்லியை அன்சாரி அழைத்தார். அவரும் மசோதாவை தாக்கல் செய்தார். உடன், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி எம்.பி.,க்கள் இருக்கையை விட்டு எழுந்து, திபு திபுவென சபைத் தலைவர் அருகே ஓடினர். மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பிய அவர்கள், இருபுறமும் இருக்கும் படிகளில் ஏறி, அன்சாரியை நெருங்கினர்.அவர் முன் இருந்த நான்கு மைக்குகளில் இரண்டு மைக்குகளை பிடுங்கி எறிந்தனர்.

சமாஜ்வாடியைச் சேர்ந்த எம்.பி., கமல் அக்தர், ராஜ்ய சபா அதிகாரிகள் அமர்ந்திருக்கும் மேஜைக்கு மேல் ஏறி, பேப்பர்களை கிழித்து எறிந்து நடனமாடினார்.இதைப் பார்த்த சபை, அதிர்ச்சியில் உறைந்தது. அன்சாரியின் இரு பக்கமும் மற்ற எம்.பி.,க்கள் ஏறி, அவரின் மேஜை மீதிருந்த பேப்பர், பென்சில் ஸ்டாண்டு, கடிகாரத்தை தூக்கி வீசினர். அது மட்டுமின்றி, அன்சாரி கையிலிருந்த பேப்பர்களை பறிக்கப் பார்த்ததும், அவர் கடுப்பானார். கோபத்துடன் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். அத்துடன் சபை 4 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இடைப்பட்ட நேரத்தில், உடைந்த மைக்குகள் அகற்றப்பட்டு, புதிய மைக்குகள் மாற்றப்பட்டன. மீண்டும் சபை கூடிய போது, பாதுகாப்புக்காக மார்ஷல்கள் நிறைய பேர் நிறுத்தப்பட்டனர். சபை முழுவதும் ஒரே டென்ஷனாக இருந்ததால், சபைத் தலைவர் இருக்கைக்கு வந்து அமர்ந்த குரியன், சபையை மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். அதன் பின், மறுபடியும் சபை கூடிய போது மாலை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

லோக்சபாவிலும், சபை கூடியதுமே, பெண்கள் மசோதாவுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூச்சல், குழப்பத்துக்கு இடையே 10 நிமிடம் கேள்வி நேரம் நடைபெற்றது. அதன் பின், தொடர முடியாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு கூடிய போது, முலாயம், லாலு பிரசாத் இருவரும் சபையின் மையப் பகுதிக்கு வந்து, "எப்படி பெண்கள் மசோதாவை நிறைவேற்றுகிறீர்கள்' என கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால், அமளியாகி சபை, நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

பெண்கள் மசோதா விவகாரத்தில், இரு சபைகளிலும் நேற்று அமளி நிலவியதால், மசோதா மீதான ஓட்டெடுப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் என தெரிகிறது. பெரும்பாலான கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், முலாயம், லாலு கட்சியினர் எதிர்ப்பதால், மசோதா நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.அத்துடன் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் வாபஸ் பெற்றுள்ளன. சமாஜ்வாடி கட்சிக்கு 21 எம்.பி.,க்களும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு நான்கு எம்.பி.,க்களும் உள்ளனர்.

லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், "இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுகிறது. இது, அரசியல் கொள்ளை; இதை நாங்கள் பொறுக்க மாட்டோம். எனவே, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்,'' என்றார்.

முலாயம் சிங் கூறுகையில், "முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்களுக்கு எதிராக காங்கிரஸ் - பா.ஜ., உள்ளன. இந்த இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவர்கள் விரும்பவில்லை; அதை தற்போது நிரூபித்துள்ளனர்,'' என்றார்.

ஐ.மு., கூட்டணியில் காங்கிரசுக்கு 208, திரிணமுல் காங்கிரசுக்கு 19, தி.மு.க.,விற்கு 18, தேசியவாத காங்கிரசுக்கு ஒன்பது, தேசிய மாநாட்டு கட்சிக்கு மூன்று என, மொத்தம் 257 எம்.பி.,க்கள் உள்ளனர். அதனால், முலாயம், லாலு தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றாலும், அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. வெளியில் இருந்து ஆதரவளிக்கும் வேறு சில எம்.பி.,க்களால் மத்திய அரசு, 272 என்ற பெரும்பான்மையை பெற்று விடும்.

ஜனாதிபதியுடன் லாலு பிரசாத் சந்திப்பு

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் நேற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து பேசினார். அப்போது, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பிரச்சினையில் தங்கள் கட்சியின் நிலையை கூறியதோடு, அந்த மசோதாவை எதிர்ப்பது ஏன்? என்பது பற்றியும் ஜனாதிபதியிடம் விளக்கி கூறினார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரியும், மேல்-சபை ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி.யுமான பிரேம்சந்த் குப்தாவும் சென்று இருந்தார்.

  • 'தி ஹர்ட் லாக்கர்' படத்துக்கு ஆறு ஆஸ்கர் விருதுகள்

    ஈராக் போர் தொடர்பான திரைக்கதையை அடிப்படையாக கொண்ட "தி ஹர்ட் லாக்கர்' என்ற படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. "அவதார்' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. உலக அளவில் சிறந்த திரைக்கதை, தொழில்நுட்பம், நடிப்பு, இயக்கம் போன்றவற்றை பாராட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விழாவில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த கேத்ரீன் பிகிலோ(58) என்ற பெண் இயக்குனர் தயாரித்த "தி ஹர்ட் லாக்கர்' என்ற படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஈராக் போரின் போது எதிரிகள் வைத்த வெடிகுண்டுகளை அகற்றும் வீரரின் கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.

    சிறந்த திரைப்படம், திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த ஒலிகலவை, ஒலி தொகுப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றுக்காக இந்த படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. கேத்ரீனின் முன்னாள் கணவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய படம் தான் "அவதார்'. இந்த படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த கேமரா, கலை இயக்கம், விஷுவல் எபெக்ட் ஆகியவற்றுக்காக அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் தரப்பட்டுள்ளன. "தி கிரேசி ஹார்ட்' படத்தில், கதாநாயகனாக நடித்த ஜெப் ப்ரிட்ஜஸ், சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருது "தி பிளைன்ட் சைட்' படத்தில் நடித்த சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டில் நிகர்நிலை பல்கலைக்கழக வழக்கு ஏப்ரல் 13-ந் தேதிக்கு தள்ளி வைப்பு

    44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்தது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு எடுத்தது பற்றி விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணை நேற்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாகர் முன்னிலையில் வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் தங்களது பதில்களை 3 வாரத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை ஏப்ரல் (அடுத்த) மாதம் 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டனர்.

  • பிரதமர்,சோனியா வருகை : மன்னார் தீவுகளில் ஆய்வு

    பிரதமர்,சோனியா வருகையை யொட்டி மன்னார் வளைகுடா கடல்பகுதியில் உள்ள தீவுகளில் கடலோர காவல்படையினர்ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் புதிய சட்டசபை கட்டட திறப்பு விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங்,காங்.,தலைவர் சோனியா வர உள்ளனர்.இதன் பாதுகாப்பு ஏற்பாடாக மார்ச் 7 முதல்14 ம் தேதி வரை, உச்சிப்புளி முதல் ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துபணி மேற்கொள்கின்றனர். இதற்காக, போலீசார் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நேற்று இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் நிலைய கமாண்டிங் ஆபிசர் செய்னி,பிரதீப்குமார் எஸ்.பி., ஆகியோர் 'ஹோவர் கிராப்ட்' ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல்பகுதிகளில் உள்ள தீவுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகள் மார்ச் 11,12,13 தேதிகளில் முகாமை விட்டு வெளியில் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. மண்டபம் அகதிகள் முகாமை கியூ பிரிவு போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.

    மேகாலயாவில் மிக நீளமான மலைக்குகை கண்டுபிடிப்பு

    மேகலாயாவில் ஜைந்தியா மலையில் 36 புதிய மலைக்குகைகளை மா என்ற அமைப்பினர் கண்டுபிடித்து உள்ளனர். இவற்றில் ஒன்று மிக நீளமான மலைக்குகையாகும். இந்த மலைக்குகையின் நீளம் 25,205 மீட்டர் ஆகும். இது இந்திய துணைக்கண்டத்தில் 3-வது நீளமான மலைக்குகையாகும்.

  • வாழச் சிறந்த நகரங்கள் சென்னைக்கு 3வது இடம்

    'இந்தியாவில் வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில், சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது' என, இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு, 'வாழும் திறன் குறியீடு 2010' என்ற தலைப்பின் கீழ், ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், 37 நகரங்கள் தரவரிசைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளது.

    ஒரு நகரில் அமைந்துள்ள வாழ்க்கைத் தரம், சமூக - கலாசார சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவ தரம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உட் பட, பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் வாழ்வதற்கான சிறந்த நகரம் டில்லி. இந்த நகரம் கல்வி, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் முன்னணியில் உள் ளது. வீட்டு வசதி வாய்ப்புகள், சமூக கலாசார அரசியல் சூழலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் தரவரிசைப் பட்டியலில், டில்லியை அடுத்து இரண்டாம் இடத்தில் மும்பையும், மூன்றாம் இடத்தில் சென்னையும் உள்ளது.

    இந்நகரங்களை தொடர்ந்து, பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத், ஆமதாபாத், புனே மற்றும் குர்கான் நகரங்கள் முறையே நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் இடம் வகிக்கின்றன. ஒட்டு மொத்த வாழ்க்கை தரத்தில், ஜாம்ஷெட்பூர் நகரம், கடைசி இடத்தில் உள்ளது. வாழ்க்கைத் தரம் என்பது நகர்ப்புற மயமாதலை குறிக்கவில்லை. நகரில் வசிக்கும் குடிமக்களின் தரமான வாழ்க்கை, நகரின் உள்கட்டமைப்பு வசதிகள், உணவு, சுத்தமான காற்று, குறைந்த விலையில் வீடுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் இணைந்து காணப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் ரகளை: துணை ஜனாதிபதியிடம் எம்.பி.க்கள் மன்னிப்பு

    பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, பாராளுமன்றத்தில் மூன்று முறை தாக்கல் செய்யப்பட்ட போதிலும் அந்த மசோதாவை நிறைவேற்றுவதில் 13 ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது.

    இந்த நிலையில், 100-வது சர்வதேச மகளிர் தினமான நேற்று, அந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக, அரசியல் சட்டத்தில் 108-வது திருத்தம் கொண்டு வரவும், மசோதா தாக்கல் செய்யவும் மத்திய அரசு தீர்மானித்தது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, இடதுசாரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரித்தன.

    ஆனால், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளம், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தீவிரமாக எதிர்க்கின்றன. பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அந்த கட்சிகள் வலியுறுத்துகின்றன.

    இந்த சூழ்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. டெல்லி மேல்-சபை கூடியதும், 100-வது மகளிர் தின வாழ்த்துச்செய்தியை சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி வாசித்தார்.

    அப்போது அவர், "அனைத்து பெண்களும் சம உரிமை, சமவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியை பெற அர்ப்பணிப்புடன் பாடுபடுமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் ஆண், பெண் பேதம் இருக்க கூடாது. முடிவுகளை தீர்மானிப்பதில் பெண்களும் பங்கு பெற வேண்டும். அதற்கு நாம் உதவ வேண்டும்'' என தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து, கேள்வி நேரம் தொடங்கியது. ஆனால், சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரீய ஜனதா தள எம்.பி.க்கள் எழுந்து நின்று, `சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்துள்ள ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

    அதுபற்றி கேள்வி நேரம் முடிந்ததும் பேசுமாறு ஹமீது அன்சாரி விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நண்பகல் 12 மணி வரை மேல்-சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், பல்வேறு அமைச்சகங்கள் சார்பான அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு மத்திய மந்திரிகளை துணைத்தலைவர் ரகுமான்கான் அழைத்தார்.

    முதலில், மகளிர் மேம்பாட்டுதுறை மந்திரி கிருஷ்ணா தீரத் எழுந்து பேச ஆரம்பித்தார். ஆனால் ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களின் கூச்சல் காரணமாக எதுவுமே கேட்கவில்லை. தொடர்ந்து, கூச்சல்-குழப்பம் நிலவியதால் பிற்பகல் 2 மணி வரை மேல்-சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் மேல்-சபை கூடியது. மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய வருமாறு சட்ட மந்திரி வீரப்ப மொய்லியை மேல்-சபை தலைவர் ஹமீது அன்சாரி அழைத்தார். உடனே, ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவையின் மையப்பகுதியை நோக்கி விரைந்தனர்.

    மேலும், மேல்-சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். லாலு கட்சியை சேர்ந்த ராஜ்நிதி பிரசாத் மற்றும் முலாயம்சிங் கட்சியை சேர்ந்த கமல் அக்தர், நந்த கிஷோர் ஆகியோர் பத்திரிகையாளர்கள் மேஜை மீது ஏறிச்சென்று மேல்-சபை தலைவரின் மேஜையில் இருந்த மசோதா நகல்களை பிடித்து இழுத்தனர்.

    அவையின் மையப்பகுதியில் இருந்த கோப்புகள் தூக்கி வீசப்பட்டன. மேலும், மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா நகல்களை கிழித்து எறிந்தனர். மேல்-சபை தலைவரான துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை நோக்கி காகிதங்கள் பறந்தன. அவருக்கு முன்பு இருந்த "மைக்'கையும் எம்.பி.க்கள் பிடித்து இழுத்து உடைத்தனர்.

    உடனே, சபை காவலர்கள் விரைந்து வந்து, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீது காகிதங்கள் விழாமல் தடுத்தனர். `மைக்'கையும் கீழே விழாமல் பிடித்தனர். மேலும், அன்சாரியை சுற்றி பாதுகாப்பாக வளையம் போல் நின்றனர். சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி.க்களின் செயலுக்கு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் எழுந்து நின்று கண்டனம் தெரிவித்தனர்.

    இத்தகைய பலத்த ரகளை மற்றும் அமளிக்கு இடையே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டமசோதாவை மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி தாக்கல் செய்தார். மேலும், மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    எனினும் தொடர்ந்து அமளி நீடித்ததால் மூன்றாவது முறையாக பிற்பகல் 3 மணி வரையிலும், பின்னர் பிற்கல் 4 மணி வரையிலும், அதன் பிறகு மாலை 6 மணி வரையிலும் டெல்லி மேல்-சபை அடுத்தடுத்து தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு டெல்லி மேல்-சபை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மீண்டும் அவை கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மசோதா தாக்கல் செய்யப்பட்டதால் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்கும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தும் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். பின்னர், அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    அதே நேரத்தில் மூத்த மத்திய மந்திரிகளுடனும், பா.ஜனதா, இடதுசாரி கட்சி தலைவர்களுடனும் பிரதமர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். மேலும், சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும், பகுஜன் சமாஜ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பதில் உறுதியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்து விட்டனர்.

    அதுமட்டுமல்லாமல், மேல்-சபையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றினால், வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் நிறைவேற்றுவது, நிதி மசோதா மீதான ஓட்டெடுப்பு போன்றவற்றிலும் எதிர்த்து வாக்களிக்கப்போவதாக அந்த கட்சிகள் அறிவித்தன.

    அந்த மூன்று கட்சிகளும் விலகி விட்டால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பாராளுமன்றத்தில் நூலிழை பெரும்பான்மையே இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பதால் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு நிச்சயமாக கிடைக்காது. பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் தோல்வி ஏற்பட்டால் மத்திய அரசின் நிலைமை சிக்கலாகி விடும்.

    எனவே, மூத்த மத்திய மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் பிரதமர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இறுதியில் மகளிர் மசோதா மீதான ஓட்டெடுப்பை தள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, இறுதி முடிவு எடுக்கவும் தீர்மானித்துள்ளது.

    4-வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் மசோதா, இந்த முறையாவது நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பெண்கள் சமுதாயம் உள்ளது.

    டெல்லி மேல்-சபையை போலவே, பாராளுமன்றத்திலும் நேற்று அமளி ஏற்பட்டது. பாராளுமன்றம் கூடியதும் குரேஷியா நாட்டு குழுவினரை சபாநாயகர் மீராகுமார் வரவேற்றார்.

    பின்னர், மகளிர் தின வாழ்த்துச்செய்தியை வாசித்தார். பின்னர், கேள்வி நேரம் தொடங்கியதும், `மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித், முஸ்லிம் பெண்களுக்கும் உள் இடஒதுக்கீடு தேவை என சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

    கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மீராகுமார் மறுத்ததால் முலாயம்சிங் தலைமையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள், அவையின் மையப்பகுதியை நோக்கி சென்றனர். அவர்களுக்கு பின்னால் லாலு பிரசாத் தலைமையில் ராஷ்டிரீய ஜனதாதளம் எம்.பி.க்களும், உமாசங்கர் சிங் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்களும் சென்றனர். சபாநாயகர் இருக்கை அமைந்துள்ள பீடத்தை சுற்றி நின்று கோஷம் எழுப்பினர்.

    ஒரு கட்டத்தில் சபாநாயகர் பீடத்தின் மீது சமாஜ்வாடி கட்சியைச்சேர்ந்த மிதிலேஷ் குமார் என்ற எம்.பி., ஏறத்தொடங்கினார். உடனே, அவை முன்னவரும், நிதி மந்திரியுமான பிரணாப் முகர்ஜி எழுந்து, `உங்கள் கட்சியினரை கட்டுப்படுத்துங்கள்' என சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்கை எச்சரித்தார். அமளி தொடர்ந்ததால், நண்பகல் 12 மணி வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

    மீண்டும் சபை கூடியதும் அமளி நீடித்தது. கேள்வி நேரம் முடிந்ததும் பிரச்சினையை எழுப்புமாறு சபாநாயகர் விடுத்த வேண்டுகோளை அவர்கள் கேட்கவில்லை. அவையின் மையப்பகுதிக்கு வந்து 15 நிமிடங்களுக்கு மேல் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பிரணாப் முகர்ஜி, அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அவையில் இருந்தனர்.

    அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி, 3 மணி, மாலை 4 மணி, மாலை 6 மணி என அடுத்தடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் பாராளுமன்றத்துக்கு வெளியே பேட்டியளித்த சபாநாயகர் மீராகுமார், `சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம்' எம்.பி.க்களின் ஒழுங்கீன நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

  • வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகை அதிகரிப்பு

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமாக, மாநிலம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் பிளாட்களின் வாடகைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பது, வாடகைக்கு விடுவது, காலியிடங்களை மனைகளாக மேம்படுத்தி விற்பது போன்ற பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேற்கொள்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வாடகைக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பராமரிப்பு செலவுகள் எகிறவே, கடந்த ஆண்டு இறுதியில் நடந்த வீட்டு வசதி வாரியக் கூட்டத்தில், '2009 நவம்பர் மாதத்தில் இருந்து வாடகைக் கட்டணத்தை 50 சதவீதம் அதிகரிப்பது' என முடிவெடுக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில், தனி வீடுகளுக்கு ஒரு சதுர அடிக்கு 4.50 ரூபாயும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 3.75 ரூபாயும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 2.25 ரூபாயும் புதிய வாடகைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிநீர்க் கட்டணமாக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட 50 ரூபாயும், நவம்பர் மாதம் முதல், 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசூலிக்கப்படுவது போல், பராமரிப்புக் கட்டணமாக மாதந்தோறும் 250 ரூபாய் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணத்தில் மர்மம் விலகியது;
    தற்கொலை செய்துகொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

    மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டபிள்யூ.ஆர்.வரதராஜன் கடந்த மாதம் 11-ந் தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டார்.

    பின்னர் அவரது பிணம் சென்னை போரூர் ரெட்டை ஏரியில் மீட்கப்பட்டது. பிணத்தை அவரது மனைவி சரஸ்வதி அடையாளம் காட்டினார்.

    இந்த நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் இதுபற்றி உறுதியாக சொல்ல முடியும் என்று இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    நேற்று மாலையில் டபிள்யூ.ஆர்.வரதராஜனின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்தது. இதுபற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால்தான் அவர் இறந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்துள்ளார்.

    தடயஅறிவியல் சோதனையில் அவரது வயிற்றில் இருந்து எடுத்த உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மையுள்ள பொருள் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

    இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.



    நேற்றைய செய்திகள்

    Bookmark and Share
  • Read More     Comments (33)