இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி. அன்புடன், ஆசிரியர் குழு.
பிரபல கொலை வழக்குகள்
(05-01-2012) காலை,IST- 09.30 மணி,நிலவரப்படி,
ராஜஸ்தான் மந்திரிகளுடன் செக்ஸ் தொடர்பு
ஆபாச வீடியோவை காட்டி மிரட்டியதால் மாயமான நர்சு வழக்கில் அதிரடி திருப்பம்
எரித்துக் கொன்று உடலை புதைத்தவர் கைது
ஜோத்பூர், ஜன.5 -
ராஜஸ்தான் மந்திரிகளுடன் செக்ஸ் தொடர்பு விவகாரத்தில் மாயமான நர்சு பன்வாரிதேவி வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாயமான நர்சை எரித்துக் கொன்று உடலை புதைத்தவர் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டது உறுதி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பில்லாரா கிராமத்தைச் சேர்ந்தவர் நர்சு பன்வாரிதேவி (வயது 36). கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதியன்று பணிக்குச் சென்ற இவர் திடீரென மாயமாகிவிட்டார். இந்த நிலையில், அவரது கணவர் அமர்சந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, பன்வாரிதேவியுடன், மாநில மந்திரி மாதர்னா மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச "சிடி' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, மாதர்னா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர், அக்டோபர் 11-ந் தேதி பன்வாரிதேவி வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மந்திரி மாதர்னா, பன்வாரியின் கணவர் அமர்சந்த், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்கான்சிங் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களான கைலாஷ் ஜாக்கர், பிஷ்னாராம் மற்றும் இவர்களது கூட்டாளிகள் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சி.பி.ஐ.யின் முதற்கட்ட விசாரணையில் மாயமான நர்சு பன்வாரிதேவியை, ஆபாச சி.டி.யை காட்டி கோடிகணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாகவும் இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தெரியவந்தது.
அதிரடி திருப்பம்
இதனிடையே, பல நாட்களாக தப்பியோடி, தலைமறைவாகி இருந்த பிஷ்னாராமின் நெருங்கிய கூட்டாளியான கைலாஷ் ஜாக்கர் மற்றும் சிலர் இந்த கொலைக்கு உடைந்தையாக செயல்பட்டு இருக்கக்கூடும் என்று சி.பி.ஐ. எண்ணியது.
இந்த நிலையில், நேற்று மராட்டிய மாநிலம் புனேயில் கைலாஷ் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார், ஜோத்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் டிரக்கில் வந்துகொண்டு இருந்த கைலாஷை சுற்றிவளைத்து பிடித்து, சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில், கைலாஷ் கைது செய்யப்பட்டது அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரித்துக் கொன்ற கொலையாளி
சி.பி.ஐ. போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். இதில் அவன், நர்சு பன்வாரிதேவியை கடத்தி, கொலை செய்து, பிரேதத்தை எரித்ததாக ஒப்புக்கொண்டான்.
அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:
"செப்டம்பர் 1-ந் தேதியன்று பில்லாரா பகுதியில், சோகன்லால் மற்றும் சகாபுதீன் ஆகிய இருவரும் காரில் நர்சைக் கடத்திச் வந்தனர். பின்னர், பன்வாரிதேவியை என்னிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர்கள், பன்வாரிதேவியை கொன்று, எரித்துவிடும்படியும், தடயங்கள் ஏதுமின்றி செய்துவிடும்படி கூறினர். அதன்படி, அவரை கொன்று, பிரேதத்தை பிஷ்னோராம் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டோம். அதன் பின்னர், அவர்கள் நர்சின் பிரேதத்தை எடுத்துச் சென்று ஓசியான் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் எரித்துவிட்டனர்.'
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் கைலாஷ் தெரிவித்துள்ளான்.
இதை அடுத்து, நர்சு எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு சென்று, கைலாஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதை உறுதிசெய்தனர்.
இது பற்றி மேலும் விசாரணை நடக்கிறது.
ஒன்றியக்குழு துணைத்தலைவர் வெட்டிக் கொலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை வலம் வந்தபோது பயங்கரம்
திருவண்ணாமலை, ஜன.5-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை வலம் வந்தபோது துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அ.தி.மு.க. பிரமுகர்
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அருகே உள்ள ஊத்தங்கல் கிராமத்தை சேர்ந்தவர் எம்.துரை (வயது 48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் துரிஞ்சாபுரம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கேட்டார். ஆனால் அவருக்கு கட்சியில் சீட் கொடுக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து 16-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் நடந்த துணைத் தலைவர் தேர்தலிலும் எம்.துரை வெற்றி பெற்றார்.
கோவிலை சுற்றி வந்தார்
அதிக ஆன்மிக ஈடுபாடு கொண்ட இவர் தினமும் காலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதில் வலம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். வழக்கம் போல நேற்று காலையும் மோட்டார் சைக்கிளில் கோவிலை வலம் வந்தார்.
காலை 9.45 மணிக்கு திருமஞ்சன கோபுரத்தை தாண்டிச் சென்றபோது எதிர் திசையில் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் துரையின் மோட்டார் சைக்கிளை மிதித்து கீழேதள்ளினர்.
வெட்டிக்கொலை
இதில் கீழே விழுந்த துரை சுதாரிப்பதற்குள் மர்ம நபர்களில் ஒருவன் அவரை வெட்டினான். பின்னர் மற்றொரு நபரும் இறங்கிவந்து வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே துரை பரிதாபமாக செத்தார். உடனே மோட்டார் சைக்கிளில் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
போலீஸ் விசாரணை
இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முன்விரோதம் காரணமா?
கொலை செய்யப்பட்ட துரையின் தந்தை முனுசாமி கடந்த 2007-ம் ஆண்டு வீட்டு முன்பு தூங்கிக்கொண்டிருந்த போது வெட்டிகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் துரையும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே அரசியல் ரீதியாக கொலை செய்யப்பட்டாரா, அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட துரைக்கு சாந்தி என்ற மனைவியும், சக்தி, ஜெகன் என்ற மகன்களும், தீபா என்ற மகளும் இருக்கிறார்கள்.
வீட்டில் உடல்கருகி கிடந்தார்:
பட்டதாரி ஆசிரியை மர்மச்சாவு
கணவர் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை
சேலம், ஜன.5-
பட்டதாரி ஆசிரியை உடல்கருகிய நிலையில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரை அடித்து கொலை செய்துவிட்டு கொலையை மறைப்பதற்கு தீ வைத்து உடலை எரித்துவிட்டதாக பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவர் குடும்பத்தினரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
மின்வாரிய என்ஜினீயர் மனைவி
சேலம் அங்கம்மாள் காலனி குப்தாநகர் பஞ்சநாதன்தெருவை சேர்ந்தவர் என்ஜினீயர் ஜெயராமன் (வயது 30). நெத்திமேடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி லதா (வயது 25). எம்.ஏ., பி.எட். பட்டதாரி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஸ்ரீலேகா (வயது 2) என்ற பெண் குழந்தை உள்ளது.
திருமணம் முடிந்ததில் இருந்து கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் பிரச்சினை
இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் லதா ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டையில் உள்ள தனது தந்தை சாந்தமூர்த்தி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து டேனிஸ்பேட்டைக்கு சென்ற ஜெயராமன், தனது மனைவியை சமாதானம் செய்து சேலத்திற்கு மீண்டும் அழைத்து வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்தபிறகும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மர்மச்சாவு
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெயராமன் வீட்டில் உடல்கருகிய நிலையில் லதா இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு போன் மூலம் தகவல் வந்தது. அதை கேட்டதும் பதறி அடித்துக்கொண்டு லதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது வாஷிங்மிசினை ஆன் செய்தபோது "எலக்ட்ரிக் ஷாக்' அடித்ததாகவும், இதில் தூக்கி வீசப்பட்டு உடல்கருகி லதா இறந்துவிட்டதாகவும் லதாவின் கணவர் ஜெயராமன் மாமனார் சாந்தமூர்த்தியிடம் கூறினார். ஆனால் இதை லதாவின் பெற்றோர் நம்பவில்லை.
கொலை என புகார்
தங்கள் மகளை அடித்து கொலை செய்துவிட்டு, நடந்த கொலையை மறைப்பதற்கு தீவைத்து எரித்துவிட்டதாகக்கூறி ஜெயராமனை லதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
இது குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலையா? குடும்பத்தினரிடம் விசாரணை
இறந்த லதாவின் உடலில் மண்எண்ணெய் வாசம் இருந்ததாகவும், இதனால் தனது மகளை அடித்து கொலை செய்து விட்டு கொலையை மறைக்க தீ வைத்து எரித்துவிட்டதாகவும் பள்ளப்பட்டி போலீசில் லதாவின் பெற்றோர் புகார் செய்தனர்.
அதன்பேரில் கணவர் ஜெயராமன், மாமனார் நடராஜன், மாமியார் அமிர்தவள்ளி, லதாவின் நாத்தனார் ஆகியோரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் லதா தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும். அதன்பிறகுதான் மேல் விசாரணை நடத்தப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.