Welcome to South Indian Crime Point
மகாத்மா காந்தி கொலை வழக்கு பாகம் - பதினொன்று


மகாத்மா காந்தி கொலை வழக்கில், 1949 பிப்ரவரி 10_ந்தேதி சிறப்பு நீதிபதி ஆத்ம சரண் தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட கோட்சேயும், மற்றவர்களும் சிறையில் இருந்து பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டனர். கோர்ட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வழக்கு பற்றிய விவரங்களை எடுத்துக்கூறியபின் தீர்ப்பை நீதிபதி படித்தார். "மகாத்மா காந்தியை கொலை செய்ததை கோட்சேயே ஒப்புக்கொண்டுவிட்டார். கொலை செய்யும் எண்ணத்துடனேயே கொலை செய்திருக்கிறார். எனவே அவருக்கு மரண தண்டனை விதிக்கிறேன். இந்த கொலைத் திட்டத்தின் "மூளை"யாக செயல்பட்டவர் ஆப்தே. அத்துடன் அவர் கோட்சேயுடன் குவாலியருக்குச் சென்று துப்பாக்கி வாங்கிக்கொடுத்துள்ளார். எனவே அவருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்" என்று நீதிபதி அறிவித்தார். "தூக்கில் போட்டு, மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்" என்று அவர் உத்தரவிட்டார். தீர்ப்பைக் கேட்டபோது கோட்சே தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டவில்லை. தனக்கு தூக்குத்தண்டனை உறுதி என்று ஏற்கனவே எதிர்பார்த்தவன்போல மவுனமாக இருந்தான். கைரேகையில் நம்பிக்கையுள்ள ஆப்தே, தன் ரேகைப்படி விடுதலை ஆகிவிடுவோம் என்று நம்பியிருந்தான். எனவே, "தூக்கு தண்டனை" என்று நீதிபதி அறிவித்ததும் "நான் நிரபராதி! என்னை விடுதலை செய்யுங்கள்" என்று அலறினான். கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே, ஓட்டல் அதிபர் கார்கரே, மதன்லால், சங்கர் கிஸ்தியா, டாக்டர் பார்ச்சூர் ஆகிய ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை சதியில் பங்கு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட வீரசவர்க்கார் விடுதலை செய்யப்பட்டார். "குற்றச் சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி போலீசார் நிரூபிக்கவில்லை. சந்தேகத்தின் பலனை சவர்க்காருக்கு அளித்து, அவரை விடுதலை செய்கிறேன்" என்று நீதிபதி அறிவித்தார். போலீஸ் தரப்பு சாட்சியாக மாறி, முக்கிய விவரங்களை கோர்ட்டில் தெரிவித்த "அப்ரூவர்" திகம்பர் பாட்ஜே விடுதலை செய்யப்பட்டார். தண்டனை அடைந்தவர்கள் அப்பீல் செய்ய, 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. கோட்சே, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய விரும்பவில்லை. ஆனால், கொலை சதியில் ஈடுபட்டதாக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஆப்தேயையும் ஆயுள் தண்டனை அடைந்த 5 பேர்களையும் காப்பாற்ற விரும்பி, "கொலையில் அவர்களுக்குத் தொடர்பு இல்லை" என்று அப்பீல் செய்தான். ஆப்தேயும் மற்ற ஐந்து பேர்களும் அப்பீல் மனு தாக்கல் செய்தார்கள். இந்த அப்பீலை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட "டிவிஷன் பெஞ்ச்"சை பஞ்சாப் ஐகோர்ட்டு அமைத்தது. பண்டாரி, ஜி.டி.கோசலா, ஆச்சுராம் ஆகிய மூன்று நீதிபதிகள் இதில் இடம் பெற்றனர். பஞ்சாப் உயர்நீதிமன்றம், கோடை காலத்தில் சிம்லாவில் நடைபெறுவது வழக்கம். எனவே இந்த அப்பீல் விசாரணை சிம்லாவில் உள்ள "பீட்டர் ஹாப்" என்ற மாளிகையில் நடைபெற்றது. ஆப்தேயும் மற்றவர்களும் இந்த வழக்கு விசாரணைக்காக சிம்லாவுக்கு கொண்டு போகப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு தரப்பில் பம்பாய் அட்வகேட் ஜெனரல் தாப்தரே உள்பட 4 பேர் ஆஜரானார்கள். ஆப்தே, மதன்லால் பாவா ஆகியோருக்கு கல்கத்தாவைச் சேர்ந்த பானர்ஜி என்ற சீனியர் வழக்கறிஞரும், கார்கரேக்கு டாங்கேயும், சங்கர் கிஸ்தியாவுக்கு பஞ்சாப் ஐகோர்ட்டு வக்கீல் அவாஸ்தியும், கோபால் கோட்சே, டாக்டர் பார்ச்சூன் ஆகியோருக்கு பம்பாயைச் சேர்ந்த இனாம்தார் என்ற வக்கீலும் ஆஜர் ஆனார்கள். நாதுராம் கோட்சே, "எனக்கு வக்கீல் வைத்துக்கொள்ள வசதி இல்லை. எனக்கு நானே வாதாடுவேன்" என்று கூறினான். எனவே, அவன் விசேஷமாக அமைக்கப்பட்ட கூண்டில் நின்று, வழக்கின் விசாரணையை கவனிக்கவும், பிறகு தன் சார்பில் வாதாடவும் அனுமதிக்கப்பட்டான். "காந்தியைக் கொலை செய்ய குற்றவாளிகள் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்கள். அந்த திட்டத்தை கோட்சே நிறைவேற்றியிருக்கிறான். குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் கீழ்க்கோர்ட்டில் தகுந்த ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே கீழ்க்கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்ய வேண்டும்" என்று அரசு தரப்பு வக்கீல்கள் வாதம் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் தங்கள் வாதத்தின்போது கீழ்க்கண்ட கருத்துக்களை வலியுறுத்தினார்கள். "1948 ஜனவரி 20_ந்தேதி மகாத்மா காந்தி கூட்டத்தில் மதன்லால் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டவே இவ்வாறு குண்டை வெடித்தான். காந்திஜி முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று எண்ணிய கோட்சே ஜனவரி 30_ல் அவரை சுட்டுக்கொன்றான். இரண்டு சம்பவங்களும் வெவ்வேறானவை. தனிப்பட்ட நபர்களின் எண்ணங்களின் அடிப்படையில் நிகழ்ந்தவை. எனவே மற்றவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை. அவர்கள் அப்பாவிகள். கொலைக்கு சதித்திட்டம் எதுவும் தீட்டப்படவில்லை. எனவே சதித்திட்டத்தில் பங்கு கொண்டதாக விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும்". இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆப்தேயின் வக்கீல் பானர்ஜி தனது வாதத்தில் கூறியதாவது:- "கோட்சேயுடன் ஆப்தே குவாலியருக்குச் சென்றதும், டாக்டர் பார்ச்சூரைப் பார்த்ததும் உண்மைதான். ஆப்தே குவாலியரில் இருந்து நேராக பம்பாய்க்குத் திரும்பி விட்டதால், கோட்சேக்கு டாக்டர் பார்ச்சூர் துப்பாக்கி கொடுத்த விஷயமோ, அல்லது கோட்சே மீண்டும் டெல்லிக்குத் திரும்பிய விஷயமோ ஆப்தேக்குத் தெரியாது. எனவே காந்தி கொலை செய்யப்பட்டதற்கும், ஆப்தேக்கும் எந்த சம்பந்தமும் இல்லை." இவ்வாறு ஆப்தே வக்கீல் பானர்ஜி கூறினார். கோட்சேயின் தம்பி கோபால் கோட்சேக்கான பம்பாய் வக்கீல் இனாம்தார் வாதாடுகையில், "காந்தி கொலை சதி பற்றி கோபால் கோட்சேக்கு எதுவும் தெரியாது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30_ந்தேதி அவன் டெல்லியில் இல்லை" என்றார். டாக்டர் பார்ச்சூருக்காக இதே வக்கீல் வாதாடுகையில், "கோட்சேயும், ஆப்தேயும் குவாலியருக்கு வந்து, டாக்டர் பார்ச்சூரை சந்தித்தது உண்மை. ஆனால் அவரிடமிருந்து துப்பாக்கி எதையும் பெறவில்லை. டெல்லியில் இந்துக்கள் பேரணி ஒன்று நடக்க இருப்பதாகவும், அதற்காக தொண்டர்களை அனுப்பி வைக்குமாறும் டாக்டர் பார்ச்சூரிடம் கோட்சேயும், ஆப்தேயும் கேட்டுக்கொண்டார்கள். கொலை சதி பற்றி டாக்டர் பார்ச்சூருக்கு எதுவும் தெரியாது" என்றார். மதன்லால் வக்கீல் வாதாடுகையில், "ஜனவரி 20_ந்தேதி, மதன்லால் குண்டு வெடித்தது உண்மை. ஆனால் அது அகதிகளின் துயரத்தை எடுத்துக் காட்டுவதற்குத்தானே தவிர, காந்தியைக் கொல்லவேண்டும் என்பது அவன் நோக்கம் அல்ல. மேலும் 20_ந்தேதியே அவன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதால், 21_ந்தேதி முதல் 30_ந்தேதி வரை நடந்ததாகக் கூறப்படும் இரண்டாவது சதித்திட்டம் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது" என்றார். கோட்சே கீழ்க்கோர்ட்டில் கொடுத்தது போன்ற நீண்ட வாக்குமூலத்தைக் கொடுத்தான். பெரும்பாலான பகுதிகள் கீழ்க்கோர்ட்டு வாக்கு மூலத்தை ஒட்டியே இருந்தன. சில வாக்கியங்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன. வாக்குமூலத்தின் முடிவில் அவன் கூறியிருந்ததாவது:- "காந்தி போன்ற மதத்துரோகிகளால் இந்துக்கள் கேவலப்படுத்தப்படும்போது, இந்து பொறுமை இழந்துவிடுவான் என்பதை அவருக்கு சுட்டிக்காட்ட விரும்பினேன். "நீ எல்லையற்ற வலிமை உடையவன்; எதையும் சாதிக்கக்கூடிய வல்லமை பெற்றவன்" என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழி, என் மனதை திடப்படுத்தியது. எதற்கும் துணிந்தவனானேன். மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் அந்த மனிதனை, 1948 ஜனவரி 30_ந்தேதி மாலை பிர்லா மாளிகையில் நான்தான் சுட்டுக்கொன்றேன். கொலை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் அவரை நோக்கிச்சுட்டேன். மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே அந்தச் செயலைச் செய்தேன். என்னுடைய இந்தச்செயல் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். காந்தி, "125 ஆண்டுகள் வாழ்வேன்" என்று கூறிக்கொண்டிருந்தார். அவரை வாழவிட்டால்தானே 125 ஆண்டுகள் வாழ்வார்? இந்துக்களை பாழாக்கிய அவர் வாழ்க்கையை உடனடியாக முடிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த நாடு மீண்டும் ஒன்றுபடவேண்டும். "ஹிந்துஸ்தான்" என்று அழைக்கப்பட வேண்டும். இதுதான் என்னுடைய கடைசி ஆசை." இவ்வாறு கோட்சே கூறினான். இந்த அப்பீலை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான கோசலா, பின்னர் எழுதிய புத்தகம் ஒன்றில் கூறியிருப்பதாவது:- "கோட்சே வாக்குமூலத்தை படித்து முடித்தபோது, நீதிமன்றத்தில் அமைதி நிலவியது. சில பெண்கள் கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள். கோட்சே வாக்குமூலத்தைப் படித்தபோது நான் இரண்டொரு முறை குறுக்கிட்டு, "இது வழக்குக்கு சம்பந்தம் இல்லாதது" என்று கூறியபோது மற்ற இரு நீதிபதிகளும் கோட்சே அடுத்து கூறப்போவதைக் கேட்க ஆவலோடு காத்திருந்தனர். நல்லவேளையாக இந்த வழக்கில் "ஜுரி"கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் கோட்சே நிரபராதி என்று பெரும்பாலான ஜுரிகள் கூறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மொத்தத்தில் ஏதோ ஹாலிவுட் படத்தில் வரும் காட்சி போல நீதிமன்றம் காட்சியளித்தது." இவ்வாறு நீதிபதி கோசலா கூறியுள்ளார்.