Welcome to South Indian Crime Point
மகாத்மா காந்தி கொலை வழக்கு பாகம் - பனிரெண்டு


கோட்சேக்கும், ஆப்தேக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை நடந்தது. மகாத்மா காந்தி அகிம்சையை வலியுறுத்தி வந்தவர். "நோய் வாய்ப்பட்டு சாவதைவிட, ஒரு சகோதரன் கையால் சாவதையே நான் விரும்புகிறேன். அந்த சகோதரனையும் தண்டிக்காமல் அன்பினால் திருத்த வேண்டும்" என்று காந்தி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
எனவே "கோட்சேயை தூக்கில் போடுவதை காந்தியே விரும்பமாட்டார். எனவே கோட்சேயை மன்னித்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும்" என்று ஒரு பிரிவினர் வற்புறுத்தி வந்தனர்.
இவ்வாறு கூறியவர்களில் மகாத்மா காந்தியின் மூன்றாவது மகனான ராம்தாஸ் காந்தி ஒருவர். அவர் துணைப்பிரதமரும், மத்திய அரசின் உள்துறை மந்திரியுமான வல்லபாய் பட்டேலுக்கு நாகபுரியில் இருந்து ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
"கோட்சேயையும், அவர் கூட்டாளிகளையும் சீர்திருத்த சிறையில் வைத்து திருத்தவேண்டும். தாங்கள் செய்தது மிகத்தவறு என்று உணரச் செய்யவேண்டும். ஆர்.எஸ்.எஸ். முறையைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியாவையும், இந்து மதத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்பதை அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.
கோட்சேக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும். இப்போது சிம்லா ஜெயிலில் இருக்கும் அவரை டெல்லி செங்கோட்டைக்கு கொண்டு வந்து ஆச்சாரிய வினோபாவை சந்திக்கச் செய்யவேண்டும். அதன் மூலம் கோட்சேக்கு மனமாற்றம் ஏற்படுமாறு செய்யவேண்டும். இந்த என்னுடைய கோரிக்கையை ஏற்க முடியாவிட்டால் கோட்சேயை சிறையில் சென்று பார்க்க எனக்கு அனுமதி தரவேண்டும். கோட்சே செய்த காரியம் எவ்வளவு கொடுமையானது என்பதை அவருக்கு எடுத்துக்கூறி அவரை நல்லவராக மாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும்." இவ்வாறு தன் கடிதத்தில் ராம்தாஸ் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.
இதன் நகலை சிறையில் உள்ள கோட்சேக்கும் ராம்தாஸ் அனுப்பி இருந்தார். இதுகுறித்து ராம்தாஸ் காந்திக்கு கோட்சே 3_6_49 தேதியிட்டு ஒரு கடிதம் எழுதினான். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"என்னால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எவ்வளவு மனத்துன்பம் ஏற்பட்டு இருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நான் வருந்துகிறேன். ஆனால் மகாத்மா காந்தியை சுட்டதற்காக நான் எள்ளளவும் வருத்தப்படவில்லை. நாட்டின் நலனுக்கு நான் செய்தது சரியானது. தூக்கு தண்டனையை மாற்றி குறைந்த தண்டனை விதிப்பதன் மூலம் என் மனதை மாற்றிவிடமுடியாது." இவ்வாறு கோட்சே குறிப்பிட்டிருந்தான்.
கோட்சேயின் தண்டனையை குறைக்க வேண்டும் என்ற ராம்தாஸ் காந்தியின் கோரிக்கையை பிரதமர் நேருவும், பட்டேலும் நிராகரித்தனர். இதுகுறித்து ராம்தாஸ் காந்திக்கு பட்டேல் எழுதிய கடிதத்தில், "காந்தியை கொலை செய்தது குறித்து, கோட்சே மனம் வருந்தவில்லை; பெருமைப்படுகிறான். எனவே அவனை சந்திப்பதற்கு உங்களை அனுமதிப்பதற்கு இல்லை. தவிர நீங்கள் இது விஷயத்தில் தலையிடாமல் அரசாங்கமும், கோர்ட்டும் அவற்றின் பணியை இடையூறு இல்லாமல் செய்வதற்கு உதவியாக ஒதுங்கியிருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சிறையில் இருந்த கோட்சேக்கு தினமும் பல கடிதங்கள் வந்தன. "ஒருவேளை நீ சிறையில் இருந்து வெளிவந்தால், படுகொலை செய்யப்படுவாய்" என்பது போன்ற மிரட்டல் கடிதங்களும் வந்தன. "நீ செய்த படுபாதகச் செயல்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேள். நீ மனம் திருந்தினால், கடவுளின் மன்னிப்பை பெறமுடியும்" என்பதுபோன்ற கடிதங்களும் வந்தன.
அப்பீலை விசாரித்த பஞ்சாப் ஐகோர்ட்டின் 3 நீதிபதிகள் (பண்டாரி, ஜி.டி.கோஸ்லா, ஆச்சுராம்) 21_6__1949 அன்று தீர்ப்பை அறிவித்தனர். கோட்சே, ஆப்தே இருவருக்கும் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. கோபால் கோட்சே, கார்கரே, மதன்லால் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. கீழ்க்கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சங்கர் கிஸ்தியா, டாக்டர் பார்ச்சூர் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தியாவில், தற்போது இறுதித் தீர்ப்பை வழங்கும் உச்ச நீதிமன்றமாக "சுப்ரீம் கோர்ட்டு" விளங்குகிறது. அக்காலத்தில் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சில்தான் உச்சநீதி மன்றம். அங்கு அப்பீல் செய்யப்பட்டதில் பஞ்சாப் ஐகோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. கடைசி கட்டமாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவது பற்றி குற்றவாளிகள் ஆலோசித்தனர். "நான் கருணை மனு அனுப்ப மாட்டேன். கருணை மனு அனுப்புவது என் செயலை (காந்தியை கொன்றதை) நானே அவமதிப்பது போலாகும்" என்று கோட்சே திட்டவட்டமாகக் கூறிவிட்டான். எனவே அவனுடைய உறவினர்கள் கருணை மனு அனுப்பினார்கள். ஆப்தே தன் கருணை மனுவில் கூறியிருந்ததாவது:- "என் செயல் குறித்து வருந்துகிறேன். இப்போது நான் மனம் திருந்திவிட்டேன். என்னை அரசாங்கம் மன்னித்து விடுதலை செய்தால், மனம் திருந்திய நல்ல குடிமகனாக நாட்டுக்கு சேவை செய்வேன். நாட்டின் நன்மைக்கும், மக்கள் நலனுக்கும் பாடுபடுவேன்." இவ்வாறு ஆப்தே கூறியிருந்தான். கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. "ஆப்தே இப்போது மனம் வருந்துவதாகவும், திருந்திவிட்டதாகவும் கூறியபோதிலும், அது காலம் கடந்த செயல்" என்று மத்திய அரசு அறிவித்தது. கோட்சேயும், ஆப்தேயும் தூக்கு தண்டனையில் இருந்து தப்ப இனி வழியே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இருவரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. எனினும், "என் கைரேகைப்படி, நான் நீண்ட காலம் வாழ்வேன். எனக்கு தூக்கு கயிறு மூலம் சாவு இல்லை. கடைசி நேரத்தில் அதிசயம் நடக்கும். என்னைத் தூக்கில் போடமாட்டார்கள்" என்று தன்னை சந்திக்க வந்த உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான், ஆப்தே.